Thursday, February 20, 2014

வடமாகாண விவசாய அமைச்சினால் செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்திற்கு உழவு இயந்திரம் அன்பளிப்பு 

news
uthayan-logo19 பெப்ரவரி 2014, புதன்

யாழ் மாவட்டத்தில் இயங்கிவரும் செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் விவசாயத் தேவைகளுக்கென வடமாகாண விவசாய அமைச்சு சிறிய உழவு இயந்திரம் ஒன்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

அதற்கான நிகழ்வுகள் வடமாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார் தலைமையில் வடமாகாண விவசாய அமைச்சின் செயலகத்தில் இன்று நடைபெற்றது.

அதன்படி யாழ் மாவட்டத்தில் உள்ள முன்னூறுக்கும் மேற்பட்ட செவிப்புலன் அற்றோர் இணைந்து செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனம் என்ற அமைப்பை நிறுவி அதனூடாகச் சுயதொழில் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவற்றில் ஒன்றாகச் சிறுவிவசாயப் பண்ணை ஒன்றை நிர்வகித்து வரும் அவர்களால் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் சிறியரக உழவு இயந்திரம் வழங்குமாறு கோரி விண்ணப்பித்திருந்தனர். அதன் அடிப்படையிலேயே இன்று அவர்களுக்கான சிறிய ரக உழவு இயந்திரம் வழங்கப்பட்டது.

அத்தோடு விவசாயச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் தெரிவுசெய்யப்பட்ட 10 பயனாளிகளுக்கும் நீரிறைக்கும் இயந்திரங்களும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் யு.எல்.எம் ஹால்டீன், கைதடி நவீல்ட் பாடசாலையின் அதிபர் மகேந்திரன் மற்றும் விவசாயத் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டு உழவு இயந்திரத்தையும், நீரிறைக்கும் இயந்திரங்களையும் பயனாளிகளுக்கு வழங்கி வைத்தனர்.