Thursday, January 29, 2015

சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலைய மக்களுக்கு இராணுவம் எச்சரிக்கை! 

logonbanner-128 ஜனவரி 2015, புதன் 10:50 பி.ப
வலி.வடக்கு மக்களை சந்திக்க வரும் பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டாம் என இராணுவத்தினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
வலி.வடக்கு மக்களை நாளைய தினம் பிரிட்டன் வெளியுறதுத் துறை அமைச்சர் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இன்று காலை வலி.வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலையத்திற்கு சிவில் உடைகளில் சென்ற இராணுவத்தினர் மக்களை மிரட்டியுள்ளனர்.
 
புதிய அரசு பொறுபேற்ற பின்னர் உயர் அதிகாரி ஒருவர் உங்கள் பகுதிக்கு விஜயம் செய்யவுள்ள அவரிடம்,நாங்கள் இந்த இடத்தில் நீண்ட காலமாக இருந்து பழகி விட்டோம்.  எனவே  உயர் பாதுகாப்பு வலய காணிகளுக்கு பதிலாக தற்போது குடியிருக்கும் காணிகளையே எங்களுக்கே வழங்குமாறு கோருங்கள்.
 
அதனை விடுத்து உயர் பாதுகாப்பு வலய காணிகளை மீள வழங்குமாறு கோரிக்கை விடுக்க வேண்டாம் என இராணுவத்தினர்  மக்களை  எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
 
இதேவேளை பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் ஹியுகோ ஸ்வெயர் இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.இன்று கொழும்பு வரும் அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர்  உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
 
இந்த சந்திப்பை முடித்துக் கொண்டு நாளைய தினம் யாழ்ப்பாணம் வருகைதரவுள்ளார். கொழும்பிலிருந்து விசேட விமான மூலம் யாழ். வரும் அவர் வடக்கு முதலமைச்சர் உள்ளிட்ட குழுவினரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
 
அதனைத் தொடர்ந்து வலி.வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலையத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.